கரூர், குளித்தலை பகுதிகளில் லாரி மோதிய விபத்தில் 2 முதியவர்கள் உயிரிழந்தனர்.
குளித்தலையை அடுத்த நச்சலூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சைக்கிளில் நச்சலூர்-குளித்தலை சாலையில் இரட்டைவாய்க்கால் கரையோரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், கரூரை அடுத்த மண்மங்கலம் ரெட்டிப்பாளையம் புதூரைச் சேர்ந்த கந்தசாமி மனைவி சோளியம்மாள்(70) . இவர், தனது பேரன் ரகுவுடன் (22), கரூரில் இருந்து ரெட்டிப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தார். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்மடை பிரிவில் சென்றபோது, பின்னால் வந்த மணல் லாரி மோதியது. இதில், சோளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரகு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.