மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் திண்டிவனத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், 16 மண்டலங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பெரம்பலூர் மண்டலம் சார்பில் கரூர் மாவட்டத்தில் இருந்து கரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 40 கிலோ எடைப் பிரிவில் மாணவர் பி. சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கமும், 35 கிலோ எடைப்பிரிவில் டி.ஜோதிவேல் வெண்கலமும், 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 27 கிலோ எடைப்பிரிவில் மாணவி பி.சந்தியா தங்கமும், 32 கிலோ எடைப்பிரிவில் என். ஸ்ரீ வாணி வெள்ளியும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் மாணவர் பி. லோகேஷ் தங்கமும், 19 வயதுக்குட்பட்ட 55 கிலோ மாணவர் பிரிவில் ஏ.ராகுல் வெள்ளியும், 65 கிலோ மாணவர் பிரிவில் பி. சிக்கந்தர் பாதுஷா வெள்ளியும் வென்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர் பி.சண்முகத்தையும் பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன், ஆலோசகர் பி.பழனியப்பன், முதல்வர் டி. பிரகாசம், உடற்கல்வி இயக்குநர் பி. மகேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.