கரூரில் வக்பு வாரிய நிலங்களை மீட்கக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கரூர் திருமாநிலையூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு வாரிய நிலங்களை மீட்க வேண்டும், வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், புதிய சமூக விழிப்புணர்வு இயக்கம், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் திருமாநிலையூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
தந்தை பெரியார் தி.க மாவட்டத்தலைவர் தனபால், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தில் வக்பு வாரிய நிலங்கள் 2000 ஏக்கர் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலத்தை பெற வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமாநிலையூர் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் குணசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடைபெற்றதால், ஒரு பெண் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.