கரூர் சந்தையில் வியாழக்கிழமை வாழைத்தார் ஏலம் விடப்பட்டதில் அவற்றின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டிகளுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையார், பொத்தனூர், அணிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், எல்லமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதத்தை விட வியாழக்கிழமை சந்தைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள் விலை மிகவும் குறைந்து ஏலம் போனது. கடந்த மாதம் ஒரு தார் பூவன்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது. ஆனால் வியாழக்கிழமை ரூ. 450-க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல கடந்த மாதம் ரூ. 800-க்கு ஏலம் போன ரஸ்தாளி ரூ.400-க்கும், ரூ. 1200 வரை விற்கப்பட்ட கற்பூரவள்ளி ரூ. 500-க்கும், ரூ.650-க்கு ஏலம் போன மொந்தன் பழம் தற்போது ரூ. 400-க்கும், ரூ.750-க்கு விற்கப்பட்ட பச்சை நாடன் ரூ. 600-க்கும் ஏலம் போனது.
இதுதொடர்பாக வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி கூறுகையில், கடந்த மாதம் ஆயுத பூஜை மற்றும் புரட்டாசி திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் வாழைத்தாரின் தேவை அதிகரித்தது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிடும்படியாக நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் அவற்றின் விலையும் குறைந்துவிட்டது. ஏற்கெனவே உரச் செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழைத்தார் அறுவடை செய்து அதனை சந்தைக்கு கொண்டு வரும் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வாழை விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். உழைப்புக்கேற்ற ஊதியம் வாழை விவசாயத்தில் கிடைப்பதில்லை. எனவே தமிழக அரசு வாழைத்தாருக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மேலும் ஜாம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு கரூரில் வாழைத்தார் விற்பனைக்கூடம் அரசு சார்பில் ஏற்படுத்தினால் வாழை விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.