விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்கும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்றார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
கரூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுமை, திறமை மற்றும் விவசாயப் பிரச்னைகளைப் புரிந்து கொண்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். காவிரியில் தண்ணீர்ப் பங்கீடு கொள்கையை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்க அவர்களுக்கு உரிமை இல்லை. நீரா பானத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என முதல்வர் அறிவித்து 6 மாதங்களாகியும் செயல்படுத்தவில்லை.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நிலத்தடி நீரை எடுக்கத் தடை உள்ளது. ஆனால் நம் நாட்டில் 1,500 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. எனவே நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும். காவிரி, தென் பெண்ணை, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும். ஆனால் நதிகளின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது. மேற்குதொடர்ச்சி மலைகளில் உருவாகி மேற்கே அரபிக்கடலில் சென்று வீணாகக் கலக்கும் நதிகளை கிழக்கு நோக்கி திருப்பிவிட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கள் இயக்க கரூர் மாவட்ட அமைப்பாளர் தமிழ்சேது, விவசாயிகள் நல சங்க அமைப்பாளர் பிகே.முத்துசாமி, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.