கரூருக்கு வியாழக்கிழமை வந்த தமிழறிஞர் வா.மு. சேதுராமனின் தலைமையிலான தமிழுக்கு முதன்மை பரப்புரை பயணக் குழுவுக்கு தமிழ் ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழுக்கு முதலிடம் கொடுத்து கடைகளில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வையுங்கள், வீட்டில் பேச்சு, எழுத்து மொழியாக தமிழைப் பயன்படுத்துங்கள், நல்ல தமிழில் உறவுகளை முறை கூறி அழையுங்கள், திருக்குறள் உள்ளிட்ட நல்ல தமிழ் நீதிநூல்களை வாங்கி வீட்டில் சேமிக்கும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி
தமிழறிஞர் வா.மு. சேதுராமன் கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரியில் தனது பயணத்தை தனது குழுவினருடன் தொடங்கினார்.
இக்குழு பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், மத்தியபிரதேசம், அலகாபாத் வழியாகச் சென்று புதுதில்லியை வரும் 22-ம் தேதி அடைகிறது. இதையடுத்து பெங்களூர் செல்லும் வழியில் வியாழக்கிழமை இரவு கரூர் வந்த அக்குழுவினருக்கு கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழனியப்பன் தலைமையில் தமிழறிஞர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் உள்ள சங்க காலப்புலவர்கள் நினைவுத்தூண் அருகே உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு தமிழறிஞர் வா.மு. சேதுராமன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் நினைவுத் தூணில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை தமிழுக்கு முதலிடம் கொடுக்குமாறு ஜவஹர் பஜார் கடைவீதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் நன்செய்புகழூர் அழகரசன், தென்னிலை கோவிந்தன், முனைவர் கடவூர் மணிமாறன், தமிழன் குமாரசாமி ஏசுதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.