வேலாயுதம்பாளையத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புன்செய்புகழூர் பேரூராட்சி சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுன்டானா அருகே நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணியில் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதைத் தடுக்கும் முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ரவுண்டானா பகுதியை அடைந்தது.
ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிதா, சுகாதார ஆய்வாளர் கார்த்தீஸ், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.