கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரிச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் வியாழக்கிழமை தொடங்கிய இச்சந்தையை கல்லூரியின் செயல் இயக்குநர் எஸ். குப்புசாமி, மகளிர் திட்ட உதவி அலுவலர் எஸ். சுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வி. கவிதா முன்னிலை வகித்தார். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற இந்த சந்தையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சார்பில் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தன. பொருட்களை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கினர். ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மைத் துறை தலைவரும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஆலோசகருமான பேராசிரியர் எம். ரேசம் உள்ளிட்டோர் செய்தனர்.