க. பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு க. பரமத்தி, நெடுங்கூர்,ஆரியூர், தென்னிலை கிழக்கு, காருடையாம்பாளையம், முன்னூர்,அத்திப்பாளையம் என 8-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சளி காய்ச்சல்,வயிற்றுப் போக்கு,பிரசவம், சர்க்கரை உள்ளிட்டவற்று உள் மற்றும் வெளிநோயாளிகளாக தினசரி 300-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர மருத்துவர் இல்லை.
தாற்காலிகமாக வரும் மருத்துவர் சிறிது நாட்கள் மட்டும் பணியாற்றிய பிறகு மேல் படிப்புக்குச் சென்று விடுகிறாராம்.
புதிதாக வரும் மருத்துவருக்கு நீண்ட நாள் நோயாளிகளின் முழு விவரம் தெரிவதில்லை.
எனவே க. பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டுமென நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.