தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என உழைப்பாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரூரில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமகோபால தண்டாள்வார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் சிவக்குமார், பொதுச் செயலர்கள் தேக்கமலை, வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வீரக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், மாநில நிதியாதாரத்தை பெருக்க புதிய கிரானைட் கொள்கை வகுக்க வேண்டும், தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும்,கட்டுமானத் துறைக்கு அரசு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். மணல் வாரியம் ஏற்படுத்த வேண்டும். ஒட்டர், போயர் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பூவைதண்டாள்வார் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். மாநில இளைஞரணித் தலைவர் கர்ணன் தண்டாள்வார் வரவேற்றார்.