கரூர் நகர்ப் பகுதியில் அண்மையில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 26 பவுன் நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் கூறியது:கரூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இதைத் தடுக்கும் வகையில், கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா மேற்பார்வையில், கரூர் நகரம், பசுபதிபாளையம், வாங்கல் மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த குற்றங்களில் ஈடுபட்ட கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த அருண்குமார் (20), முகமதுசமீர் (19), சென்னை திருவிக. நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (25), இன்பராஜ் (26), வினோத்குமார் (17), ராஜசேகர் (20) ஆகிய 6 பேரை தனிப்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து 26 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். திருடர்களை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.