தமிழக நதிகளில் மணல் அள்ளுவதை கைவிட்டு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
கரூர் வடக்கு காந்திகிராமத்தில் ஏஐடியுசி மாவட்டக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் வி. ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ்.வடிவேலன் வேலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், வரும் மே தினம் அன்று கரூரில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, கரூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது, கரூரில் சட்ட மேதை அம்பேத்கருக்கு சிலை நிறுவப்படாமல் உள்ளதைக் கண்டிப்பதும், விரைவில் அரசு சார்பில் அவரது சிலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, தமிழக ஆறுகளில் அரசு மணல் அள்ளுவதை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்.சக்திவேல் நன்றி கூறினார்.