ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி கரூர், குளித்தலையில் வருவாய்த் துறை அலுவலர்கள் புதன்கிழமை ஒருமணி நேர பணி வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
வருவாய்த் துறை ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், வருவாய்த் துறை ஊழியர்கள், அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், துணை ஆட்சியர் நிலையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஒரு மணி நேரம் பணியைப்
புறக்கணித்து வெளிநடப்பு செய்யும் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் அன்பழகன் தலைமையில் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தினர். வருவாய்த் துறை அலுவலர் சங்கப் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளித்தலை: இதே கோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை ஊழியர்கள் புதன்கிழமை பணிகளை ஒரு மணி நேரம் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.