திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி. சேகர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் அடிப்படையில், மே 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் தலித் பாண்டியன் (43). இவர் வழக்குரைஞர் ராஜேந்திரன் மூலம் கரூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் -2 -இல் கடந்த 23 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை ஆளுநர் தட்டியதை, அந்த பெண் பத்திரிகையாளர் ஆட்சேபித்திருந்தார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் தனது முகநூல் பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பதிவு செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதித்துறை நடுவர் பாக்கியம், மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என அறிவித்திருந்தார். புதன்கிழமை காலை வழக்கு விசாரணை வந்த போது, புகார் மனுவில் கூறப்பட்டுள்ள எஸ்.வி.சேகர், வழக்குத் தொடர்ந்த தலித் பாண்டியன் ஆகிய இருவரும் மே 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.