கட்டளை பகுதியில் மதகில் நீர் கசிவு ஏற்பட்டதை சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட கட்டளை பகுதியிலிருந்து வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. வியாழக்கிழமை இரவு அதன் கரைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் உள்ளுர் மக்களின் உதவியுடன், விடிய விடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மணல் மூட்டைகளைக் கொண்டும், கூடுதல் மணலைக் கொண்டும் நீர்க்கசிவு பகுதிகளை சரிசெய்தனர். இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் நீர் கசியாமல் தடுக்கப்பட்டது. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் நீர் புகாமல் இருப்பதைக் கண்காணித்திடவும், அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக தாழ்வான இடங்களிலிருந்து மேடான இடங்களுக்கு கொண்டு செல்லவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், இரவு முழுவதும் பணியாற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அப்பகுதியிலுள்ள மக்கள் யாரையும் ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் லியாகத், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.