காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து நெரூர், திருமுக்கூடலூர், மேலமாயனூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை 1.80 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில் அணைக்கு வெள்ளிக்கிழமை 2.25 லட்சம் கன அடி நீர் வருவதால் இந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதேபோல பவானிசாகர் அணையில் வியாழக்கிழமை விநாடிக்கு 50,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை 70,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் அந்த தண்ணீரும் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலந்து வருகிறது.
இதனால் காவிரியில் மேட்டூர் அணைக்கு கீழே 2.95 லட்சம் கன அடி நீரும், அமராவதியில் 13,000 கன அடி நீரும் என 3 லட்சம் கன அடி நீருக்கும் மேல் காவிரியில் வருவதால் கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் தாழ்வான பகுதியான தவுட்டுப்பாளையம், மேலமாயனூர் பகுதியில் வெள்ள நீர் ஏற்கெனவே வியாழக்கிழமை புகுந்துள்ள நிலையில், மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
காவிரி நீரும், அமராவதி நீரும் சேர்ந்து திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, சோமூர், மேலமாயனூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள வாழை, கோரை, மரவள்ளிக்கிழங்குச் செடிகளை சூழ்ந்துள்ளது.