அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் அவரது படத்திற்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன்வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ. ஜெயராமன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்அகரமுத்து, பொறியாளர் அணி மாநில துணைச் செயலர் செந்தில்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ராஜா, மாவட்ட செய்தித் தொடர்பாளர் இளங்கோ, வணிகர் அணி அமைப்பாளர் கண்மணி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி பிரிவு அலுவலர் நலச்சங்கம் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தனர். பொருளாளர் ரமேஷ், இணைச் செயலர் ஈஸ்வரன், துணைத் தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். இணைச் செயலர் விமல்ராஜ், தொழிற்சங்க செயலர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.