கருவூர் நகரத்தார் சங்கம் சார்பில் வியாழக்கிழமை பிள்ளையார் நோன்பு விழா கரூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து இச்சங்கத்தின் செயலர் மேலை பழநியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கார்த்திகை தீப நாளில் நோன்பு விரதம் தொடங்கி ஒவ்வொரு இழை நூல் ஒன்றை எடுத்து, 21 ஆம் நாள் சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் நோன்பு களையும் நாளாக அன்றுமுன் இரவு நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் வீடுகள், கோயில்கள், மண்டபங்களில் ஒன்றுகூடி பிள்ளையார் நோன்பு விழாவைக் கொண்டாடுவர்.
கருப்பட்டியும், பாலும் வற்றக் காய்ச்சிய திரட்டுப்பால், கருப்பட்டி பணியாரம், அவல் பொரி வகைகள், ஆவாரம் பூ, கண்ணுப்பிள்ளை பூக்கொண்டு விநாயகரை அலங்கரித்து வழிபடுவர்.பின்னர் மாவிளக்கில் பிள்ளையார் பிடித்து, விநாயகர் முன் சமுதாயப் பெரியவர்கள் மரியாதை செய்து, அமர வைக்கப்பட்டு அவர்கள் வழிபாடு செய்து இழை எனும் மாவிளக்கின் திரியில் சுடர் ஏற்றிய பின்னர் நோன்பு களையப்படும்.
தொடர்ந்து வழிபாட்டில் வைத்து வழிபட்ட உப்பு, சர்க்கரை, கல்கண்டு, மஞ்சள் , மாலை , விளக்கு, சட்டை, பேரீட்சை, ஸ்கூல் பேக் பழம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஏலம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.