கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த வதியம் ஊராட்சிக்குட்பட்ட கண்டியூரில் பாம்பலாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரியாக கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூரைச் சேர்ந்த மணிவாசகம் (53) உள்ளார். இந்த கோயில் ஊருக்குச் சற்று வெளியே உள்ளது.
புதன்கிழமை காலை இவர் கோயிலைத் திறந்து உள்ளே சென்றபோது கோயில் உள்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடியுள்ளதும், கோயில் உள்ள கருவறையில் சுவாமி கழுத்தில் கிடந்த முக்கால் பவுன் தங்கத் தாலியையும் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.