கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதனுடன் தொடங்கியதையடுத்து ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். பின்னர் அவர் 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முன் 40 நாள் இரு வேளை உண்ணா நோன்பு இருப்பதை தவக்காலமாக கடைப்பிடிப்பர். அந்த நாட்களில் இறைவனை மூன்று வேளையும் நினைத்து சிறப்பு தியானத்தில் ஈடுபடுவர். மேலும் தவக்காலத்தின் ஆறாவது நாளை குருத்தோலை ஞாயிறு தினமாக கடைப்பிடிப்பர். அந்நாளில் இயேசுவை கழுதையில் ஏற்றி, தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா (புகழ்) எனப் புகழ் பாடுவர். குருத்தோலை ஞாயிறன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட குருத்தோலையை வீடுகளில் ஓராண்டாக வைத்து வழிபடுவர். தவக்காலம் தொடங்கும் புதன்கிழமையன்று அந்த குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி பக்தர்கள் நெற்றியில் பூசி சாம்பல் புதனாக அனுசரிப்பர்.
நிகழாண்டிற்கான தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையடுத்து கரூரில் புனித தெரசாள் ஆலயத்தில் ஆலய பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் மாலையில் சிறப்பு திருப்பலி தொடங்கியது. முன்னதாக எரிக்கப்பட்ட சாம்பல் பக்தர்கள் நெற்றியில் பூசப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஹென்றி தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய உபகாரம் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.