ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
வருவாய்த் துறை, கல்வித் துறை, காவல்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 23 ஓய்வூதியர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த 13 ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியம், 5 மற்றும் 6-வது ஊதியக்குழுவின் நிலுவை கோருதல், பணிக்கொடை நிலுவை போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது மீது உரிய துறை அலுவலர்கள் காலதாமதம் இல்லாமல் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்றார்.
மேலும், கூட்டத்தில் இரு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ.86,765-க்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
சென்னை ஓய்வூதியரக இணை இயக்குநர் மஞ்சுளா, துணை இயக்குநர் மதிவாணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கார்த்திகேயன், மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.