கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரைக் கண்டித்து கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை இரவு முதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்துக்கு புதிதாக மாறுதலில் பணியேற்றுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து. கணேசமூர்த்தி விதிகளுக்கு முரணாக கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலரை நிர்பந்தப்படுத்துவதாகக் கூறியும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்ற சங்க நிர்வாகிகளை அவமரியாதையாக பேசுவதாகக் கூறியும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை இரவு முதல் சங்க மாவட்டத் தலைவர் க. பாண்டிக்கண்ணன் தலைமையில் செயலர் கோ. லட்சுமணன், பொருளாளர் ஆர். கணேசன் உள்ளிட்டோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்குள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், எந்த ஊழியருக்கும் பிரச்னை என்றால் சங்கம் தலையிடும் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நிர்பந்தத்தால் இடமாற்றும் செய்யப்பட்டுள்ள நான்கு ஆசிரியர்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டம் விடிய, விடியத் தொடரும் என்றனர்.