லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கிய இரண்டாவது நாளில் கரூரில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் கண்டுள்ளன.
கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்று கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்களும் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இரண்டாவது நாளாக கரூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 2,000 சரக்கு லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்ககளில் இருந்து லாரிகள் மூலம் தூத்துக்கூடி, சென்னை, விசாகப்பட்டிணம் போன்ற கடற்கரை நகரங்களுக்கு அனுப்பப்படும் வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்கள், ஏற்றுமதி ரக கொசுவலைகள் மற்றும் சாதா கொசுவலைகள், புகழூர் டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் நோட்டுக்கள், காகிதங்கள் போன்றவை தடைபட்டுள்ளன.
இதனால் இரண்டாவது நாளாக பொருட்கள் அனுப்பும் பணி முடங்கியுள்ளதால் கரூரில் மட்டும் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
ஆனால் லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்த ஒரு தடையில்லாமல் கிடைத்து வருகின்றன.