கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 7, மாணவிகளுக்கு 5 விடுதிகள் உள்ளன. அதேபோல, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தலா 2 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டம், பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்கள் சேரலாம்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தொலைவு 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலகத்தில் ஜூன் 20ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலகத்தில் ஜூலை 15ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.