மாற்றுத் திறனாளி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து மாற்றுப்பணி வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 2ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர் நல்வாழ்வுச் சங்கம் அறிவித்துள்ளது.
கரூரில் அச்சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் அரியகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சுமார் 600 மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து மாற்றுப் பணி வழங்க வேண்டும். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆக. 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். பேட்டியின் போது, மாநிலத் தலைவர் நாச்சியப்பன், மாவட்டத் தலைவர் வேலுசாமி, செயலாளர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.