கரூரில் தேசிய பேரிடர் மீட்பு வாகனம் மோதியதில், முதல்வர் வருகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காயமடைந்தார்.
தேனி மாவட்டம், குரங்கணி மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை மாலை சேலத்தில் கரூர் வழியாக மதுரை சென்றார்.
இதையடுத்து முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக கரூர் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் (50) என்பவர் புத்தாம்புதூர் பிரிவில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான தேசிய பேரிடர் மீட்பு வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பு சுவரை சேதப்படுத்தி, அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மீது மோதியது. இதில், மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.