கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், வெஞ்சமாங்கூடலூரில் குடகனாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் த.அன்பழகன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரவக்குறிச்சி வட்டம், வெஞ்சமாங்கூடலூரில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் கூறுகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 4.8.2016-இல் பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கையின்போது, வெஞ்சமாங்கூடலூரில் தடுப்பணை கட்ட நிர்வாக அனுமதி அளித்தார்.
அதன்படி, ரூ.7 கோடி மதிப்பில் 6.10.2017 அன்று பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஒப்பந்தப்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பணி முடிவடைய வேண்டும். இருப்பினும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் 238 ஹெக்டேர் விளைநிலங்கள் பயன்பெறுவதுடன் சுமார் 1.5 கி.மீ தொலைவில் சுமார் 100 ஆழ்துளை கிணறுகள், 50 கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெறும் என்றார்.
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி பொறியாளர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.