கரூர் மாவட்டத்தில் எதிர் வரும் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் சீராக இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மற்றும் தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள் ஆகியோருடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் த. அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது:
கரூர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் எதிர் வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கவும், நீர் சேகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களில் ஏற்படும் பழுதை மின்வாரிய அலுவலர்கள் உடனே சரிசெய்ய வேண்டும். குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் அடைப்புகளை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆட்சியர் த.அன்பழகன் பேசியது: குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து வரும் கோரிக்கை மனுக்கள் மீது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்தாலோசித்து பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மகளிர் திட்ட அலுவலர் பாலகணேஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் தமிழ்நாடு எம்.செல்வராஜ், ஏஆர்.காளியப்பன், வை.நெடுஞ்செழியன், எஸ்.திருவிகா, விசிகே.ஜெயராஜ், என்எஸ்கே. கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.