கரூரில் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து போலீஸார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சாலை விதிகளை மதித்து வாகனம் இயக்க வேண்டும், ஓடும் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது, செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா வழங்கினார். இதில், நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.