கரூர் ரத்தினம் சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை வழியாக பஞ்சமாதேவி, வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே கரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் பாதாள சாக்கடை திட்டக் குழாய்கள் சேதமடைந்து அவ்வப்போது பெரிய பள்ளம் உருவாகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அவற்றை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இப்பணியால் ரத்தினம் சாலை போக்குவரத்து, ஆயிர வைசியர் மண்டபம், ஐந்துரோடு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இப்பணிகள் கடந்த ஓராண்டாகவே ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.