கரூரில் செவ்வாய்க்கிழமை மன நலம் பாதிக்கப்பட்டு தெருவோரம் சுற்றித்திரிந்த 45 பேருக்கு தொண்டு நிறுவனத்தினர் முடி திருத்தம் செய்தனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் செயல்படும் நியு தெய்வ சிட்டி அறக்கட்டளையினர் மற்றும் ஈரோடு மாவட்டம் சாலைபுதூரில் செயல்படும் காகம் அறக்கட்டளையினர் ஆகியோர் தெய்வசிட்டி அறக்கட்டளையின் நிறுவனர் என்.தெய்வராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை கரூரில் சாலையோரம் சுற்றித்திரிந்த மன நிலை பாதிக்கப்பட்ட 45 பேருக்கு சிகை அலங்காரம் செய்தனர்.
கரூர் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள், கோவைச்சாலை, ரயில் நிலையம், மாரியம்மன் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, ஜவஹர் பஜார், தாந்தோணிமலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 45 பேருக்கு முடி திருத்தம் செய்தனர். பின்னர் அவர்களை குளிப்பாட்டி உணவு வழங்கினர். இந்நிகழ்வை கண்ட பொதுமக்கள் தொண்டு நிறுவனத்தினரைப் பாராட்டினர்.