தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், கரூர் மாவட்டத்தில் 98 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தூக்குக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்திடுத்திருந்தனர். இதையடுத்து கரூர் நகர் பகுதியில் வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. கரூர் உழவர் சந்தை பகுதியில் மட்டும் பெரும்பாலான காய்கறிகடைகள், மளிகைக்கடைகள், அரிசிக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் கரூர் ஜவஹர் பஜார், காமாட்சியம்மன் கோயில்வீதி, மேற்குபிரதட்சணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள் அனைத்தும் எப்போதும் போல திறக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கடவூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 98 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
மேலும் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் ஆகியன வழக்கம்போல இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கரூரில் இருசக்கர வாகனங்களை பழுதுநீக்குவோர் சங்கத்தினர் தங்களதுகடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக கரூர் ஜவஹர் பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.