கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் புதுதில்லி இன்கம்டாக்ஸ் அணி 49-44 என்ற புள்ளிக்கணக்கில் புதுதில்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியை வென்று எல்ஆர் நாயுடு நினைவு சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 60-ம்ஆண்டு தேசியளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
இரு பிரிவுகளாக மோதிய அணிகளில் ஏ பிரிவில் சென்னை கஸ்டம்ஸ், ஹைதராபாத் இன்கம்டாக்ஸ், டெல்லி ஏர்போர்ஸ், புதுதில்லி இந்தியன் ரயில்வே, பெங்களூர் ஏஎஸ்சி ஆகிய 5 அணிகளும், பி பிரிவில் சென்னை ஐசிஎப், தில்லி இன்கம்டாக்ஸ், பஞ்சாப் போலீஸ், லோனவ்லா
இந்தியன் நேவி ஆகிய 4 அணிகளும் என மொத்தம் 9 அணிகள் பங்கேற்று விளையாடின.
கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை லீக் முறையில் ஆட்டங்கள் நடைபெற்றன. இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் புதுதில்லி இன்கம்டாக்ஸ் அணி 49-44 என்ற புள்ளிக்கணக்கில் புதுதில்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியை வென்று எல்ஆர் நாயுடு நினைவு சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
போட்டியில் முதலிடம் பிடித்த புதுதில்லி இன்கம்டாக்ஸ் அணிக்கு பரிசாக ரூ. 50,000 மற்றும் சுழற்கோப்பை, இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.30,000, மூன்றாமிடம் பிடித்த பஞ்சாப் போலீஸ் அணிக்கு ரூ. 25,000, நான்காமிடம் பிடித்த ஏஎஸ்சி பெங்களூர் அணிக்கு ரூ.20,000 என பரிசுகளும், சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசு, கோப்பைகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச் செயலர் அதவ்அர்ஜுனன், கரூர் கூடைப்பந்து கழக மாவட்ட துணைத் தலைவர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் வழங்கினர். ஏற்பாடுகளை சங்கச் செயலர் கமாலூதீன் செய்தார்.