டிஎன்பிஎல் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் காகிதக்கூழ் இலவச தொழிற்கல்வி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 4 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாயப் பணியின் கீழ் ஆண்டுதோறும் திருச்சி எஸ்.ஐ.டியில் தொழிற் பட்டயப் படிப்பு பயில 5 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி இலவசத் தொழிற்கல்வி அளித்து வருகிறது. இந்த இலவசக் கல்வி திட்டத்தில் சேர்ந்து பயன் பெற ஆலை சுற்றுவட்டார ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தர முகவரி கொண்டவராகவும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று 60 சதவிகிதத்துக்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், 01.06.2018 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள மாணாக்கர்கள் விண்ணப்ப படிவங்களை பொது மேலாளர் - மனித வளம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் - 639 136, கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மேற்குறிப்பிட்ட முகவரியில் ஜூன் 4 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.