கரூர் அமராவதி ஆற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வ நன்மாறன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் நகர் பகுதி வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் வழித்தடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதேபோல இங்கு பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வர்கள் இணைந்து கரூர் லைட்ஹவுஸ் பாலத்திற்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றின் நீர் வழித்தடங்களில் இருந்த சீமைகருவேலை மரங்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் ஆற்றின் இயற்கையான வழித்தடம் மாறும் நிலை ஏற்படும்.
எனவே கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அமராவதி ஆற்றில் சீமைக் கருவேல மரங்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் தன்னார்வலர்களுடன் இணைந்து 2 மாதங்களில் அகற்ற கரூர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.