மணல் குவாரியை முற்றுகையிட முயன்ற 14 பேர் கைது

மணத்தட்டை அரசு மணல் குவாரியை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியினர் மற்றும் காவிரி ஆறு

மணத்தட்டை அரசு மணல் குவாரியை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியினர் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் 14 பேரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மணத்தட்டையில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி அனுமதியின்றி செயல்படுவதாகவும், குவாரியில் இருந்து முறைகேடாக மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தடுத்துநிறுத்த வேண்டும். குவாரியை மூட வேண்டும், இல்லையேல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வெள்ளிக்கிழமை காலை நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் சீனிபிரகாஷ் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் மணத்தட்டை அரசு மணல் குவாரியை முற்றுகையிடச் சென்றனர்.
முன்னதாக அரசு மணல் குவாரியில் இருந்து லாரிகள் வரும் பாதையான கீழவதியத்தில் ஒன்றுகூடினர். பின்னர் மணத்தட்டை குவாரி நோக்கிச் சென்றனர். அப்போது அங்கு வந்த குளித்தலை நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார், வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட வந்தவர்கள், மணத்தட்டையில் அரசு மணல்குவாரி இயங்க அனுமதி உள்ள கடிதத்தை காண்பியுங்கள் என்றனர். ஆனால் போலீஸார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாருங்கள் என்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வர மறுத்ததால் அங்கேயே போலீஸார் நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் சீனிபிரகாஷ் மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 14 பேரைக் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.  
இதனிடையே குளித்தலை உட்கோட்ட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயராமன், குளித்தலை போலீஸீல் மணத்தட்டை அரசு மணல்குவாரியை பார்வையிடச் சென்றபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனது பணியைத் தடுத்தாகப் புகார் அளித்தார். போலீஸார் கைதான 14 பேரையும் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி பிரஸ்நேவ் அவர்களை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கைதான இரு பெண்கள் திருச்சி பெண்கள் சிறையிலும், ஆண்கள் 12 பேரும் குளித்தலை கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com