புரட்டாசி மாத 4 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசித் திருவிழா கடந்த மாதம் 13 ஆம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கோயிலில் கடந்த 19 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் சுவாமிக்கு மிகவும் உகந்த கிழமை என்பதால் கடந்த 22 ஆம் தேதி புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே கோயிலுக்கு பக்தர்கள் வரத்துவங்கினர். முன்னதாக பூதேவி, ஸ்ரீதேவியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், நா.சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.