ரசாயனம் கலந்த வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுத் தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகளான கடல், ஆறு, குளம் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாடும்போது சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயனம் கலந்து வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. மாவட்ட நிர்வாகத்தால் சிலைகளை கரைப்பதற்கு கண்டறியப்பட்டுள்ள இடங்களான காவிரி ஆற்றின் கரையில் உள்ள தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலை கடம்பர் கோவில் அருகே, அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி ராஜபுரம் ஆகிய இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்காத வகையில் அவற்றிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.