கடவூர் அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கரூர்-பஞ்சப்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கடவூர்ஒன்றியத்துக்குட்பட்ட வடவம்பாடி ஊராட்சியில் முத்தம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வடவம்பாடி ஊராட்சி சார்பில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டும், காவிரிக்குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுதொடர்பாக அப்பகுதியினர் வடவம்பாடி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் கூறவில்லை. மேலும் குடிநீருக்காக அவர்கள் பல கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் காலிக்குடங்களுடன் கரூர்-பஞ்சப்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் லாலாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்ரமணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், விரைவில் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டுச் சென்றனர்.