மனதையும், உடலையும் வலிமையாக வைத்திருந்தால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
கரூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்துறை சார்பில் 160 கர்ப்பிணிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சரிவிகித ஊட்டச்சத்துகளை உட்கொள்ள வேண்டும். மேலும் இனிமையான இசை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவற்றைச் செய்வதன் வாயிலாக மன அமைதி கிடைக்கும். இதன் பயன் குழந்தைக்கும் கிடைக்கும். அதன் மூலம் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவில் இனிப்பு, காரம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இச்சத்துக்கள் குழந்தைக்கும் கிடைக்கிறது.
நீங்கள் உங்களுக்காக சேர்த்து வைக்கும் ஒரே சொத்து நீங்கள் பெற்றெக்கக்கூடிய பிள்ளை. அந்த சொத்தை உருவாக்கக்கூடிய சிற்பி நீங்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய உணவு, மன அமைதி, கேட்கக்கூடிய சொல், செயல் இவை அத்தனையும் சார்ந்ததுதான் உங்கள் குழந்தையின் வளர்ச்சி. உங்கள் குழந்தையை சிறந்த குழந்தையாக வளர்க்க வேண்டுமென்றால் மனம் மற்றும் உடல் இரண்டையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். நாளை ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கக்கூடிய நல்ல செயல் மற்றும் சிந்தனையை உருவாக்கக்கூடிய நல்ல பிள்ளைகளை பெற்றெடுக்க சகோதரிகளான உங்களை நான் வாழ்த்துகிறேன் என்றார்.
விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம. கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பரிமளாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா கு. சரவணமூர்த்தி, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் நிர்மல்சன், வட்டாட்சியர் ஈஸ்வரன், கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், வை.நெடுஞ்செழியன், பசுவைசிவசாமி, சாகுல்ஹமீது மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சபிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.