கரூர் சீரடி சாய்பாபா கோயிலில் புனித பாதுகையை திரளான பக்தர்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனர்.
சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஸ்ரீசீரடி சாய்பாபா பயன்படுத்திய காலணி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து கரூர் சீரடி சாய்பாபா கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட பாபாவின் காலணி எனும் பாதுகைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், கரூர் சீரடி சாய் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பாதுகை ஞாயிற்றுக்கிழமை (செப்.16) கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சீரடிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.