சாலை பணியாளர்களுக்கும் 7 ஆவது ஊதியக் குழுவில் தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள்(அன் ஸ்கில்டு) சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் (பொ) ஆர். குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம் வரவேற்றார். கே.ஞானசேகரன், முருகையன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் இரா.வைரவன் சங்கக் கொடியேற்றி வைத்து ஏற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் பி. அன்பழகன், பொருளாளர் எம். கோபாலகிருஷ்ணன், செயலாளர் பி. சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செ.விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சாலை பணியாளர்களுக்கு அரசாணை எண் 338-ன்படி அன் ஸ்கில்டு என மாற்றம் செய்து அரசு விதிமுறைகளின்படி ஊதியம் ரூ.5200, ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900 என நிர்ணயம் செய்து அதன் தொடர்ச்சியாக 7 ஆவது ஊதியக்குழுவில் உள்ள தர ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது பணிநீக்க காலத்தை பணிக்காலமாகவும், ஓய்வூதியப் பலன்களுக்கும், பணிக்கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும், சாலை ஆய்வாளர், இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை சாலை பணியாளர்களைக் கொண்டு வயதுமூப்பின்படி உடனடியாக நிரப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏ.சிங்கராயர் நன்றி கூறினார்.