பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் 494 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சத்திலான வேளாண் கருவிகளை வியாழக்கிழமை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
உற்பத்திச் சார்ந்த திட்டத்தில் 122 பயனாளிகளுக்கு ரூ. 7.7 லட்சத்தில் விசைத்தெளிபான்கள், 194 பயனாளிகளுக்கு ரூ. 8.9 லட்சத்தில் பேட்டரி தெளிப்பான்கள், 56 பயனாளிகளுக்கு ரூ. 13.4 லட்சத்தில் தீவனப்புல் நொறுக்கும் இயந்திரங்கள், 21 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்தில் பால் கறவை இயந்திரங்கள், 101 பயனாளிகளுக்கு ரூ. 5.05 லட்சத்தில் புறக்கடை கோழி வளர்ப்புக்கான கூண்டுகள் என மொத்தம் 494 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சத்திலான வேளாண் கருவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.
நிகழ்ச்சியில், வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ராஜகோபால், துணை இயக்குநர் அண்ணாதுரை, புதுவாழ்வுத் திட்டப் பொது மேலாளர் ரூபவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.