பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், திருப்பெயர் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தாக்குதலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மண்டல அமைப்புச் செயலர் இரா. கிட்டு, சிதம்பரம், கடலூர் மண்டல அமைப்புச் செயலர் சு. திருமாறன், மாநிலச் செயலர் வீர. செங்கோலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாவட்ட துணைச் செயலர் ந. கிருஷ்ணகுமார், ஒன்றியச் செயலர்கள் சி. பாஸ்கர், எம்.பி. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைச் செயலர் பேரா. முருகையன், பெரம்பலூர் மக்களவை தொகுதி துணைச் செயலர் சா. மன்னர் மன்னன், இசுலாமிய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலர் சு. ராதிச் அலி, முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலர் அ.க. தமிழ்குமரன், குன்னம் சட்டப்பேரவை துணைச் செயலர் மா. கவியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.