பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகே இருவேறு சம்பவங்களில் தண்ணீரில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன் (11). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது கிணற்றுக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது, நீச்சல் தெரியாததால் கிணற்றில் தவறி விழுந்த மோகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, மோகனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மண் குட்டை நீரில் மூழ்கி மாணவன் சாவு:
ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமராஜ் (8). இவர், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், காரை கிராமத்திற்கு அருகேயுள்ள வெள்ளை மண் குட்டைக்கு சனிக்கிழமை குளிக்க சென்றார். அப்போது, நீச்சல் தெரியாததால் ராமராஜ் நீரில் மூழ்கினார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த நபர்கள், அந்த மாணவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு ராமராஜ் உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து, பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.