வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடியில் ஈடுபடும் முகவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார் தமிழக விவசாய தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார்.
பெரம்பலூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களின் நலனை காத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு புலம்பெயருவோருக்காக தி.மு.க-வால் தொடங்கப்பட்ட, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடு சென்று நாடு திரும்பி, வாழ்வை இழந்து நிற்போரின் வாழ்வை மறுசீரமைப்பு செய்யவும், அவர்கள் தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க நடவடிக்கை தேவை. புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து காயமடைந்தோர், உயிரிழந்தோர் என 400 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1982 இல் கொண்டுவரப்பட்ட இமிக்ரேசன் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை, மோசடியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏமாற்றும் முகவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நெடுஞ்செழியன், செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.