ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், கால்நடை மருத்துவர் ஆர். குமரேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், கோமாரி நோய், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க புரோட்டீன் மருந்துகள் வழங்கினர்.
இந்த முகாமில், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பங்கேற்றனர். இதில், மாணவிகள் மருத்துவ முகாமின் நோக்கம், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் இரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.