நல்ல எண்ணங்களே சிறந்த மனிதர்களை உருவாக்கும் என்றார் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், கர்ப்பிணிகளுக்குத் தேவையான கையேடுகள், சீர்வரிசைப் பொருள்கள் வழங்கிய அவர் மேலும் பேசியது:
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட தமிழக அரசு, தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலமாக, சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை கலைந்து அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் அனைத்து தாய்மார்களும் டிவி, செல்லிடபேசி உள்ளிட்டவைகளிலிருந்து விலகி, தங்களது குழந்தையைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அனைத்து தாய்மார்களும் எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து, நல்ல எண்ணங்களை தங்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும், சிறந்த குடிமகன்களாக உருவாக முடியும்.
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். தாய்ப்பாலின் அவசியம், சுகாதார வாழ்வின் அவசியம், ஆரோக்கியமான உணவு வகை குறித்து அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அறிவார்ந்ததாக சமுதாயத்தில் சிறந்து விளங்க வாய்ப்பு எற்படும் என்றார் ஸ்ரீதர்.
முன்னதாக, கர்ப்பிணிகளுக்கு உடல் நலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், கர்ப்பகாலத்தில் சரிவிகித உணவு, தாய்ப்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, குழந்தைப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் அருள்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.