பெரம்பலூர் அருகே பழுதான மின்மாற்றியை சரி செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட வேலூர் கிராமத்தில் விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின் மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்ததாம். இதனால், மின் விநியோகம் இல்லாததால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமல் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பழுதடைந்த மின்மாற்றியை பழுதுநீக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் செட்டிக்குளம் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டும், இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், பொதுமக்கள், உடனடியாக மின் மாற்றியை சீரமைக்க வேண்டும். அல்லது, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்வாரியத் துறை அலுவலர்கள் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, புதிதாக மின்மாற்றி அமைத்துத் தரப்படும் என உறுதி அளித்ததன்பேரில், விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.