பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே கிணறு வெட்டிய போது பாறை விழுந்ததில் கூலித் தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த துரைசாமி, தங்கப்பொண்ணு ஆகியோரது வயலில் பாசன வசதிக்காக பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் வடிவேல் (50), ராஜூ மகன் கலியன் (40), நல்லுசாமி, செல்வராஜ் ஆகியோர் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, பாறையை உடைப்பதற்காக கம்ப்ரஷர் மூலம் துளையிட்டதாக தெரிகிறது. அப்போது, அங்கு ஏற்பட்ட அதிர்வில் கிணற்றின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த பாறை சரிந்து கிணற்றில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலியன் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிசிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கலியன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.